முழு ஊரடங்கால் வெறிச்சோடியது எடப்பாடி நகரம்
கரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்திடும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் எடப்பாடி நகரம் வெறிச்சோடியது.
எடப்பாடி: அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்திடும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த ஞாயிறன்று முழு ஊரடங்கால், எடப்பாடி நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
வழக்கமாக அதிகாலை முதலே இயங்கிடும் உழவர் சந்தை, எடப்பாடி ராஜாஜி பூங்கா அருகில் உள்ள தினசரி மார்க்கட், பஜார் தெரு, ஈஸ்வரன்கோயில் வீதி, உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, வாடகை கார்கள், சுற்றுலா வேன்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் இயங்காத நிலையில் நகரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் அதிகாலை முதலே வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் பிரதான சாலைகளில், காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.