கல்பாக்கம் அருகே பேருந்துகள் மோதி விபத்து: 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி
கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தில் அருகே காத்தான்கடை பகுதியில் திங்கட்கிழமை மாலை அரசுபேருந்து ம் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கல்பாக்கம் புதுபட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு தனியார் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது கல்பாக்கத்தை அடுத்த காத்தான்கடை அருகில் சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வேகமாக வந்து தனியார் பேருந்து பக்கவாட்டில் மோதியதில் பக்கவாட்டில் தனியார் பேருந்து முழுமையாக சேதமடைந்து பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் விபத்துக்குள்ளாகி 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில இறந்தவர்கள் ராமாபுரத்தைச் சேர்ந்த வேட்டையப்பன், அன்னபூரணி, அலமேலு, முனியம்மாள் என்பது தெரிய வந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்களை பொது மக்களும் போலீசாரும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், கூவத்தூர் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.