ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் அருகே கேரளா மாநில காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், இளம்பெண் உயிரிழந்தார். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அருர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஹரிகிருஷ்ணன்(26). அதேமாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த கார்த்தி மகள் சுருதி கார்த்திகா(22). இருவரும் காதலர்கள். அம்மாநிலத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர்.
கொடைக்கானல் செல்வதற்காக கேரள மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை ஈரோடு வந்தனர். இருவருக்கும் வழியிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள காளைமாடு சிலை பகுதியில் இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் சில மணி நேரத்தில் சுருதி கார்த்திகாவும், ஹரிகிருஷ்ணனும் அப்பகுதியிலேயே சுயநினைவை இழந்து மயங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீஸார் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுருதி கார்த்திகா புதன்கிழமை உயிரிழந்தார். ஹரிகிருஷ்ணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.