திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் அமைத்துள்ள நவீன தானியங்கி மூலம் முகக்கவசம் வழங்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் போன்ற செயல்களில் தனியார் அமைப்பான தே மினிஸ்ட்ரோ அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில், முகக்கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வலியுறுத்தும் நோக்கத்தில் தி மினிஸ்ட்ரோ அறக்கட்டளை மற்றும் குபோடா விவசாய உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை ஆகியோரின் பங்களிப்பு நிதியுதவியுடன் ரூ.40 ஆயிரம் மதிப்பில் நவீன தானியங்கி மூலம் முகக்கவசங்கள் வழங்கும் இயந்திரம் நிறுவுவதற்கு முன்வந்தனர்.
அதன்பேரில் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள மணவாளநகர் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனியார் வேளாண்மை இயந்திரம் தயார் செய்யும் தொழிற்சாலையில் பொது மேலாளர் ஹிசாகாசு கிட்டானோபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறக்கட்டளை நிர்வாகி சாமுவேல் பிரபாகர், ஞானராஜ் சாதச்சாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வெங்கத்தூர் ஊராட்சி தலைவர் சுனிதா பாலயோகி பங்கேற்று தானியங்கி முகக்கவசம் வழங்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தானியங்கி இயந்திரம் மூலம் முகக்கவசம் எடுத்து பொதுமக்களுக்கு அணிவித்தார்.
இந்த தானியங்கி இயந்திரத்தில் 1,2,5 ஆகிய நாணயங்கள் செலுத்தினால் உடனே முகக்கவசம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரத்தில் ஒரே ரேக்கில் 33 முகக்கவசங்கள் என 4 ரேக்குகளில் 132 அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே வீடுகளில் இருந்து முகக்கவசம் இல்லாமல் வரும் பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் முகக்கவசங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாமகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தினேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் யோகானந்தம், நிர்வாகி பூபதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.