சென்னை வண்ணாரப்பேட்டையில் குழி தோண்டும் பணியின்போது மண்சரிவில் சிக்கியவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதல் தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் 3 தொழிலாளர்கள் சிக்கினர்.
இதில் இருவரை சக பணியாளர்கள் உடனடியாக மீட்டனர். ஒருவரை மீட்க முடியாமல் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் 3 மணி நேரம் போராடி மண்ணுக்குள் சிக்கியிருந்தவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ஆகாஷ், வீரப்பன் என்றும், உயிரிழந்தவர் சின்னதுரை எனவும் தெரியவந்துள்ளது.