ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: அரசியல் காழ்ப்புணர்ச்சி என எதிர்க்கட்சித் தலைவர் விமரிசனம்
ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடரப்படாமல் இருப்பதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடரப்படாமல் இருப்பதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடருமாறு அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:
"பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உரையாற்றினார். அவர் பேசும்போது, ஜெயலலிதா பெயரில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, அதைத் தொடர வேண்டும் என இந்த அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க | ஜெயலலிதா பல்கலை. விவகாரம் : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சர் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாகச் சொன்னார். அதனால், பேரவையிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஜெயலலிதா தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து மறையும் வரை கல்வியில் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். என்றைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் அதிகமாக நிதி ஒதுக்கினார்.
தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக, நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக, உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். அதனால், உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது.
அவருக்கு பெருமையும் புகழும் சேர்க்கும் விதமாக அவரது பெயரில் புதிதாக பல்கலைக்கழகம் ஆரம்பித்தோம். ஆளுநரும் இதற்கு அனுமதியளித்தார். துணை வேந்தரும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் வந்ததால், அதை எங்களால் முழுமையாக நிறுவ முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அந்தப் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட தற்போதைய அரசிடம் வலியுறுத்தினோம். ஆனால், அது தொடராது, அதற்கு மாற்றாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சரும், முதல்வரும் தெரிவித்தனர்.
நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதற்குக் காரணம்."