உத்தமபாளையம் : தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் வாழைக்காய் ஏற்றிச் சென்ற சரக்கு வாகன ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வாகனத்திலேயே மரணமடைந்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த காசிம்(50). இவர் சனிக்கிழமை அப்பிபட்டி பகுதியில் தோட்டத்திலிருந்து வாழைக்காய்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி மதுரை மேலூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது அப்பிபட்டி காளியம்மன் கோவில் வழியாக சென்றபோது ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வாகனத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன் மற்றும் சமூக ஆர்வலர் பாட்ஷா உள்ளிட்டோர் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற போதே அதன் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.