தமிழ்நாடு

காரைக்குடியில் நினைவுப்பரிசு விற்பனையகம்: முதல்வர் திறந்துவைத்தார்

DIN

காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின்கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறிக் குழுமத் திட்டத்தின் வாயிலாகச் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தைத் திறந்து வைத்தார்.

இப்புதிய விற்பனையகம் 5,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு, தரைத்தளத்தில் 4 விற்பனையகங்கள் சுத்த பட்டு இரகங்களுக்கும், 3 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும், முதல் தளத்தில் 6 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும் மீதமுள்ள ஒரு விற்பனையகம் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் வெளிப்புறத்தில் சிற்றுண்டிச் சாலை, சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா ஆகியவை வாடிக்கையாளர்கள் மற்றும் நெசவாளர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கைத்தறிக் குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்திப் பெற்ற முக்கிய இரகங்களான அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடிச் சேலைகள், பரமக்குடிச் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருப்புவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர இரகங்களும் இவ்விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும்.

இவ்விற்பனையகத்தில் தமிழகத்திலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பங்கு பெறும். மேலும், இவ்விற்பனையகத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறித் துணி இரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT