புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உடல்நிலை சரியில்லாமல் (நெஞ்சு வலி) புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதை அறிந்து, புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அங்கிருந்த சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவ குழுவினர் சந்தித்து, சட்டப்பேரவைத் தலைவரின் உடல் நலம் குறித்து விசாரணை செய்தார். அவர் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவசியம் ஏற்படும் நிலையில் அவரது உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இதேபோல் முதல்வர் என். ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சென்று பேரவைத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.