முகப்பு
தமிழ்நாடு

அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கல்லூரிகள்: முதல்வர் திறந்துவைத்தார்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

Updated On : 1 டிசம்பர், 2021 at 5:53 PM
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். 
பகிர்:

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய புதிய கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.  

தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

Advertisement

2021-22 ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை- கொளத்தூர், நாமக்கல் மாவட்டம்- திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் -ஒட்டன்சத்திரம்,தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Com, BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் கல்லூரிகள் திறந்துட உயர்கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. 

முதற்கட்டமாக சென்னை, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2.11.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, பழனி -அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம், சின்னயகவுண்டன்வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட விளாத்திக்குளம் -அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகலை மற்றும் அறிவியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. 

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிகக் கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இக்கல்லூரிகள் பெரிதும் உதவியாக அமையும். 

இந்தநிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப.,  இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயாபி. சிங், இ.ஆ.ப., மற்றும்அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.