தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கக் கோரிய வழக்கினை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 95% பேர் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். ஆனால், இந்த பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப் பாடமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இடமாறுதல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்றுமொழியாக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.