தமிழகத்தில் அரசுப் பணிகளில் இருப்போர் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞா்களே 100 சதவீதம் நியமனம் செய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் இதற்காக போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தோ்வாக கட்டாயமாக்கப்படும் என பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா். அதுகுறித்த அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது,
அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயமாகத் தமிழ் மொழித் தோ்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதித் தோ்வுக்கான பாடத் திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிா்ணயம் செய்யப்படும். தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தோ்ச்சி கட்டாயம்.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் மொழி தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பணியில் இருக்கக்கூடிய அனைவரும் தமிழ்ப்புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நிபுணர்களுடன் ஆலோசித்தே தேர்வு முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும், ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர்கள் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.