அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் இரங்கல்
அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன்.அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சரின் பொது வாழ்வில் உற்ற துணையாகவும்- உறுதிமிக்க ஆதரவாளராகவும் விளங்கிய பவானி அம்மாளின் மறைவு பேரிழப்பாகும். தனது ஒவ்வொரு துளி முன்னேற்றத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் அமைச்சர் கணேசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி (தனி) தொகுதியில் வெற்றி பெற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சி.வெ.கணேசன். கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பவானி (54). விருத்தாசலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தம்பதியினருக்கு கவிதாலட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்து 4 பெண் குழந்தைகளும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இதில், கவிதாலட்சுமி கடந்த ஆண்டில் கரோனோ தொற்றினால் பலியானார். இந்நிலையில், இன்று காலையில் பவானிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.