புதுக்கோட்டை: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் சாலையைச் சேர்ந்தவர் சேக்தாவூத் மகன் அம்ஜத்கான் (44). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கருவுற்றதை அடுத்து பெண்ணின் தாய் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 18ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அம்ஜத்கானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளி அம்ஜத்கானுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர். சத்யா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே ரூ. 3.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ. 2.50 லட்சம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.