மணப்பாறை ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு டோக்கன் விநியோகம்
மணப்பாறை பொத்தமேட்டுபட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இரவு முதல் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்று வருகின்றனர்.
திருச்சி: மணப்பாறை பொத்தமேட்டுபட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இரவு முதல் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பொத்தமேட்டுபட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் வரலாறு சிறப்புமிக்க போட்டியாகும்.
நிகழாண்டு வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இங்கு, இந்த பகுதி மட்டுமின்றி திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள் களம் காணும்.
பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகள் பங்கேற்பதை இப்பகுதி மக்கள் பெருமையாக நினைத்து வருகின்றனர்.
தற்போது நடைபெறும் போட்டிக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள புனித வியாகுல மாதா பேராலயத்தில் நடைபெற்றது.
சுமார் 600 காளைக்களுக்கு மட்டும் வழங்கப்படும் டோக்கன்களை வாங்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு முதல் காத்திருந்து தற்போது டோக்கன்களை வாங்கி செல்கின்றனர்.
சில காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் கவலையுடனும், ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
கரோனா தடை காலத்தில் தளர்வுகளுடன் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு திருச்சி மாவட்டத்தில் பெரிய போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் வகையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன், 300-க்கும் மேற்பட்ட காளையர்கள் களம் காணவுள்ளனர்.