முகப்பு
தமிழ்நாடு

ஊழல் புரிந்தவர்கள் சொத்துகளை அரசுடைமையாக்குவதில் ஆட்சேபனை இல்லை: துரைமுருகன்

ஊழல் புரிந்தவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவது வரவேற்புக்குரியது என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
காட்பாடியில் பேசிய திமுக பொதுச்செயலர் துரைமுருகன்
பகிர்:

ஊழல் புரிந்தவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவது வரவேற்புக்குரியது. அந்தவகையில், சசிகலாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்திருப்பதில் திமுகவுக்கு ஆட்சேபனை இல்லை என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது..

கிருபானந்த வாரியாரின் தமிழுக்கு நான் சிஷ்யன். அத்தகைய கிருபானந்த வாரியார் இறந்த போது ஒரு இரங்கல்கூட தெரிவிக்காதவர் ஜெயலலிதா. தவிர, அவரது உடலுக்கு அதிமுகவினர் ஒருவரும் மாலை அணிவிக்கவில்லை. இந்த வரலாறு தெரியாமல் இப்போது தமிழக முதல்வர் வாரியர் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதாகும். கிருபானந்தவாரியார் இறந்தபோது அவரது உடலைத் தொட்டு இறக்கியவன் நான். அவருக்கு திமுக ஆட்சியில்தான் மணிமண்டபமும் கட்டப்பட்டது.

திமுகவால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. இந்த கேள்வியை சசிகலாவையும், மௌனமாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தையும் தான் கேட்க வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தல் வரை அதிமுக இருக்குமா என தெரியவில்லை. அதிமுகவில் தலைவர் யார் என்பதே குழப்பமாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் எங்கும் வரமாட்டேன் என உள்ளேயே இருக்கிறார். அவருக்கு என்ன திட்டம் உள்ளது என்றே தெரியவில்லை.

சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பை இதுவரை அரசியல் வரலாற்றில் கண்டதில்லை. குற்ற வழக்கு சாட்டப்பட்டு விடுதலையான ஒருவருக்கு இத்தகைய வரவேற்பு அளித்திருப்பது அவமானமாகும். தியாகம் என்ற சொல்லுக்கான மரியாதையையே அதிமுகவினர் கெடுத்துவிட்டனர். இதன்மூலம், தியாகத்தை கேளிப் பொருளாக்கி விட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு இப்படி வரவேற்பு அளித்தால் நாடு நலம் பெறுமா?.

சசிகலாவுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து சம்பாதித்தவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்வது வரவேற்கத்தக்கது. இதில் திமுகவுக்கு ஆட்சேபனை இல்லை. முதல்வருக்கு மிரட்டல் என்ற போக்கு கண்டிக்கத்தக்கது. காவல் துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் இதை கவனிக்க வேண்டும்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைக் கிராமங்களில் சாலை வசதிக்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் எத்தனை முறை எந்தெந்த அலுவலகங்களுக்குச் சென்று மனு கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது அமைச்சர் கே.சி.வீரமணி கோரிக்கையின் பேரிலேயே சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →