புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அடுத்தடுத்த ராஜிநாமா நடவடிக்கைகள் காரணமாக, ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால், சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அடுத்தடுத்த ராஜிநாமா நடவடிக்கைகள் காரணமாக, ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால், சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3 திமுக, 1 சுயேச்சை என 18 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை வகித்து வந்த நிலையில், அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததால், பெரும்பான்மை இழந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது ஆளும்கட்சி ஆதரவு 14, எதிர்கட்சிகள் பலம் 14 என சமநிலையில் உள்ளது. எனவே, ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்ததால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.ஜான்குமார் செவ்வாய்க்கிழமை காலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
2016 - இல் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற அவர் முதல்வர் நாராயணசாமிக்காக அத்தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதில் இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமியும் வெற்றி பெற்றார்.
ஜான் குமாருக்கு புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் எம்பியாக தேர்வானதால் காலியான காமராஜர் நகர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏ ஆனார்.
இந்நிலையில் அதிருப்தியில் இருந்த ஜான்குமார் இருமாதங்களுக்கு முன்பு பாஜக புதுவை பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை சந்தித்து பேசினார். இப்போது திடீரென எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். நாளை ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருக்கும் நிலையில் ஜான்குமார் ராஜிநாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் புதுவை பேரவையில் ஆளும்கட்சி ஆதரவு 14, எதிர்கட்சிகள் பலம் 14 என சமநிலையில் உள்ளது