சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,627-ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 1594 ஆக இருந்தது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நாளொன்றுக்கு 2,000-த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாநகராட்சியின் தொடர் மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை காரணமாக நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 500-க்கும் குறைவானவர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது நோய்த் தொற்று மேலும் குறைந்து நாளொன்றுக்கு 150-க்கும் குறைவானவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 2 லட்சத்து 34,345 பேர் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 லட்சத்து 28,580 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது குறைந்து 15 மண்டலங்களில் 1,600-க்கும் குறைவானவர்களே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், சில வாரங்களுக்கு முன்பு வரை 1500 என்ற அளவில் இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 1627 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 167 பேரும், அண்ணாநகரில் 154 பேரும், அம்பத்தூரில் 151 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால் இதுவரை 4,138 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.