தமிழ்நாடு

காத்திருப்புப் பட்டியலில் டிஜிபி ராஜேஷ் தாஸ்: விசாரணைக் குழு அமைப்பு

DIN


சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 6 பேர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவரைக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அங்குச் சென்றார். அங்கு ராஜேஷ்தாஸ், முதல்வருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நிலையில் இப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இச் சம்பவம் தமிழக காவல் துறையினரிடம் பெரும் அதிர்ச்சியையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

விசாரிக்க குழு:

இதற்கிடையே, பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் அடிப்படையில் விசாரணைக் குழு அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை உத்தரவிட்டார். 

இக் குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல் துறையின் தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ. அருண், காஞ்சிபுரம் டிஐஜி பி. சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே. ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  
இவர்கள், இந்த புகார் குறித்து ஓரிரு நாள்களில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. 

அதேவேளையில் விசாரணைக்காக ராஜேஷ் தாஸ், பணியிட மாற்றம் செய்யப்படுவார் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர். 

காவல் துறையில் பாலியல் தொடர்பான புகார்களை விசாகா கமிட்டி விசாரணை செய்யும். ஆனால், இப்போது டிஜிபி அளவிலான அதிகாரி, பாலியல் புகாரில் சிக்கியிருப்பதால் கூடுதல் தலைமைச் செயலர் அளவிலான அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜேஷ் தாஸ் மீதான புகார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவர் மீது துறை ரீதியாகவும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT