போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் பல்வேறு சங்கத்தினர் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் பல்வேறு சங்கத்தினர் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி, வியாழக்கிழமை அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி உள்பட பல்வேறு பணிமனையில் இருந்து பேருந்துகள் பேருந்து நிலையங்களுக்கு செல்லவில்லை. பணிமனைகளிலேயே அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 85 சதவீத பேருந்துகள் இயக்கப்படாமல். இதனால், பேருந்து நிலையங்களில் ஏராளமான பயணிகள் பல மணி நேரமாக காத்திருக்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இயக்கப்படால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்.
இருப்பினும் பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் உள்ளூர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல இயக்கப்படும் தனியார் பேருந்துகள்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வெளியூர் செல்லும் பயணிகளும், கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இருப்பினும், தனியார் பேருந்துகள் மற்றும் சில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன. அதிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
பேருந்துகள் இயங்காததால் ஆட்டோ, கார் போன்றவைகளில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து சேவையை முழுமையாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.