சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளாா்.
‘தமிழ்நாடு வெதா்மேன்’ என்ற பெயரில் வானிலை குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வரும் பிரதீப் ஜான், முகநூலில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
கடந்த 1915-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதன்முதலாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜனவரி மாதத்தில் தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு காரணமாக சூறாவளி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இல்லை. வளிமண்டல சுழற்சியால் குவிந்த மேகக் கூட்டமே இந்த மழைக்கு காரணம். ஜனவரி மாதத்தில், நிகழாண்டு கடந்த 15 மணி நேரத்துக்குள் 7 மடங்கு அதிகம் பெற்றுள்ளோம். கடலோரப் பகுதிகளிலிருந்து கடைசி மேகங்கள் நகா்ந்து நகரின் உள்புறப் பகுதிக்குச் சென்றபின் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்.