நாமக்கல்: பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வியாழக்கிழமை அதிரடியாக 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனை நல்ல முறையில் இருந்ததால் அதன் விலையும் சராசரியாக உயர்ந்து வந்தது. திங்கள்கிழமை வரை அதிகபட்சமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.10 விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுகிறது. இதனால் முட்டை விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து 25 காசுகள் குறைக்கப்பட்டு முட்டை விலை ரூ 5.10-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.92-ஆகவும், முட்டைக் கோழி ரூ.52-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.