தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்,சென்னையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் இருந்த திருமண மண்டபம், சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த இடத்தின் குத்தகைதாரர், நிலத்தை காலி செய்து கொடுத்த பின், அங்கு மூன்று அடுக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுரம் ஆதீன மடம், தற்போது அறப்பணிகளில் அக்கறை காட்டாமல் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே அனுமதியின்றி கட்டடம் கட்ட மடத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
Advertisement
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, மடம் என்பது அரசு அமைப்பு என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர, இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.