அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.
உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.10 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது.
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக் கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர் போட்டி காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. அதனை வீரர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெறும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு மணி நேரத்தில் 100 காளைகள் வாடிவாசலில் திறக்கப்பட்டுள்ளன. காளைகளுக்குக்காக 2 ஆம்புலன்ஸ்கள், மாடு பிடி வீரர்களுக்கு 8 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
அவனியாபுரதில் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்யப்படாத சில காளைகளுடன் வாடிவாசலுக்கு செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்
போட்டியில் பங்கேற்க 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்துள்ள 430 மாடு பிடி வீரர்கள் களம்கண்டு வருகின்றனர்.
முதல்வர்-துணை முதல்வர் பரிசு:
முதல்வர், துணை முதல்வர் சார்பில் சிறந்த மாடு பிடி வீரருக்கு ரூ.1 லட்சம், சிறந்த காளைக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் கே ராஜு, எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா ஆகியோர் சேர்ந்து அறிவித்துள்ளனர்.