சேலம் மாவட்டத்தில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
முதல்கட்டமாக நாடு முழுவதும் கரோனா முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் கரோனா தடுப்பூசி போடுவதற்காக, 12 மையங்கள் அமைக்கப்பட்டு தினசரி 1 மையத்திற்கு 100 நபர்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 27,900 தடுப்பூசிகள் இருப்பில் உள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.