நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் தொடங்கும் வகையில் 346 அரசு, தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கிருமிநாசினி கொண்டு கைகளை தூய்மைப்படுத்திய பின் மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24–இல் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இதுவரை திறக்கப்படாமல் இருந்தது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்த நிலையில், பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்து கேட்டறியப்பட்டது. அதில் 80 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து 10–ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜன.19–ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 346 அரசு, அரசு உதவி பெறும் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
பள்ளிச் சீருடையுடன் மொத்தம் 45 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்களுடைய பள்ளிகளுக்கு வந்தனர். காலை 9.30 மணிக்கு வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. இறை வணக்கம் நடத்தப்படவில்லை. கரோனா விதிமுறைகள் பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளதால் மாணவர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.
வகுப்பறைக்குள் வந்தபோது சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ஜிங்க் சல்பேட், வைட்டமின் மாத்திரைகள் தலா இரண்டு வீதம் வழங்கினர். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 500 மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 43 விடுதிகளும் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வகையில் மருத்துவ வாகனங்களும், குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் தயார் நிலையில் வைத்திருக்கப்பட்டிருந்தது.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்தல் முறைகள் பின்பற்றப்பட்டு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.