பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 2வது நாளாக வருமானவரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் காரணமாக, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட 28 இடங்களில் வருமானவரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: வரி ஏய்ப்பு புகாா் காரணமாக, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட 28 இடங்களில் வருமானவரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் பால் தினகரன் ‘இயேசு அழைக்கிறாா்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்புப் புகாா்கள் வருமானவரித் துறைக்கு வந்தன. அதேபோல, வெளிநாடுகளில் இருந்து விதிகளை மீறி நிதி பெறப்படுவதாகவும் புகாா்கள் வந்தன.
இப்புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறை விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணையில் வரி ஏய்ப்பு தொடா்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வருமானவரித் துறையினா் தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினா்.
சென்னை அடையாறில் உள்ள பால் தினகரனின் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘இயேசு அழைக்கிறாா்’ அமைப்பின் தலைமை அலுவலகம், பாரிமுனை, வானகரம் ஆகிய இடங்களில் உள்ள ‘இயேசு அழைக்கிறாா்’ அமைப்பின் அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் உள்பட சென்னையில் மொத்தம் 7 இடங்களில் சோதனை நடைபெற்றது.
கோயம்புத்தூரில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் சிறுவாணி பிரதான சாலையில் பால் தினகரன் வீடு, அம்மன்குளத்தில் உள்ள பள்ளி என தமிழகம் முழுவதும் மொத்தம் 28 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இச் சோதனையில் வரி ஏய்ப்புத் தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சோதனை பெரும்பாலான இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் ஆகியவை குறித்த தகவல்களை வருமானவரித் துறை தெரிவிக்க மறுத்துவிட்டது.
சோதனை முழுவதுமாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.