ஜனவரி 29 முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து ரூ.2,500 கொடுக்கப்பட்டது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை வரும் 29ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறேன். மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று உறுதியளிக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும். தேர்தல் அறிக்கை வேறு, 100 நாள் செயல்திட்டம் வேறு. காலை, மாலை என 30 நாள்களுக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஏற்கெனவே மக்கள் கிராம சபைக் கூட்டம் மூலம் மக்களை சந்தித்து வந்த ஸ்டாலின் ஜன.29 முதல் அடுத்தகட்ட பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.