முகப்பு
தமிழ்நாடு

வேதா நிலைய சாவியைப் பதிவாளரிடம் ஒப்படைக்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

வேதா நிலையத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு மட்டும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: வேதா நிலையத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு மட்டும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீட்டை அரசுடமையாக மாற்றுவதை எதிர்த்து ஜெ.தீபக்கும், வேதா நிலையத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி என்.சேஷசாயி, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம். ஆனால் பொதுமக்கள் யாரையும் வீட்டை பார்வையிட வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. வீட்டுக்குள் தங்களது குடும்பத்துக்குச் சொந்தமான விலை மதிக்க முடியாத பொருள்கள் உள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். எனவே நிகழ்ச்சி முடிந்த பின்னர் வேதா நிலையத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை சாவி உயர்நீதிமன்றம் வசம் தான் இருக்கும் என உத்தரவிட்டிருந்தார்.

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத் தரப்பில், உரிய இழப்பீடு கொடுத்துதான் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சாவியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என வாதிடப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ள அனுமதித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.