ராமதாஸுடன் 4 அமைச்சர்கள் சந்திப்பு
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இதில் பாஜக மட்டும் தான், அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது.
மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை கூட்டணி தொடர்வது குறித்து எவ்வித கருத்தையும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக, தங்களது கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்வதற்காக அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் கூட்டணி குறித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு எடுப்பார் என மாநிலத் தலைவர் கோ.க. மணி தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.