மதுரை அருகே ஜெயலலிதா கோயில்: முதல்வர், துணை முதல்வர் திறந்து வைத்தனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டிருக்கும் கோயிலை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக கட்டப்பட்ட கோயிலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஆளுயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் கும்பாபிஷகம் மற்றும் திறப்பு விழாவையொட்டி கடந்த 3 நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோயில் திறப்பு விழாவையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நலிந்தவர்களுக்கு முதல்வர், துணைமுதல்வர் கோ தானம் வழங்கினர். பின்னர் யாகசாலை பூஜைகளில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா கோயிலுக்கான கல்வெட்டை திறந்து வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் அழைத்துவரப்பட்டிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு மாலையணித்து பணமுடிப்பு, நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
அதன்பின்னர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளைத் திறந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.