காங்கயம்: சாலை விபத்தில் தம்பதி உள்பட மூவர் பலி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திங்களூரைச் சேர்ந்தவர் டி.முத்துராஜா(26), இவரது மனைவி கிருபா (24), கிருபாவின் தங்கை பிரியா (17), இந்த 3 பேரும் திருப்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த வாகனத்தை முத்துராஜா ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் காங்கயம் திருச்சி சாலையில் பகவதிபாளையம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருச்சியில் இருந்து ஊதியூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முத்துராஜா, கிருபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், பலத்த காயமடைந்த பிரியாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரியா உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.