இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் உத்தரவாதம் கிடையாது: உயர்நீதிமன்றம்
இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாகனங்களுக்கான உத்தரவாதம் கிடையாது
சென்னை: இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாகனங்களுக்கான உத்தரவாதம் கிடையாது என நுகர்வோருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சாலையில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க ஏதுவாக வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இரு சக்கர வாகனங்களில் இந்த கண்ணாடிகள் அகற்றப்படுகிறது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது.
தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டத்தின்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , தமிழக போக்குவரத்து துறை ஆணையர், இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
மேலும், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாகனத்துக்கான உத்தரவாதம் கிடையாது என நுகர்வோரை எச்சரிக்க வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
தேவைப்பட்டால், இதுதொடர்பாக உத்தரவாத விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களளுக்கு அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.