தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17: நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதிகபட்சமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரியின் பந்தலூர், கோவையின் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.