பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு
பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது.
இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
இந்நிலையில் இன்று முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் கரும்பு, வாழை, மஞ்சள், நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் குணசேகர், ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் தீபக் ராஜா, மாவட்ட மகளிரணித் தலைவி புனிதம் ஐயப்பன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி, செந்தில்குமார், மண்டலத் தலைவர்கள் நந்தகுமார், அன்பரசு, செல்வகுமார், குணசேகர், காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.