முகப்பு
தமிழ்நாடு

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக்கோரிய வழக்கு: நீதிபதி விலகல் 

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி  என். கிருபாகரன் அமர்வு விலகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி என். கிருபாகரன் அமர்வு விலகியுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

டாக்டர்.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது. தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு இதுவரை பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை கல்வி மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்கு தடை விதிக்க வேண்டும். டாக்டர்.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கவும், பதிவாளரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →