ரூ. 1300 கோடி வசூலிலும் ஒரு நேர்காணல் கூட கொடுக்காத இயக்குநர்!
வசூலில் சக்கைபோடு போட்ட திரைப்படத்தின் இயக்குநர் குறித்து...
பிரபல பாலிவுட் இயக்குநர் ஆயிரம் கோடி வெற்றிப்படத்தைக் கொடுத்தும் எந்தவொரு நேர்காணலையும் அளிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் உரி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதித்யா தர். இப்படத்திற்கு தேசிய விருது வென்று கவனிக்கப்பட்டவர் அடுத்ததாக துரந்தர் திரைப்படத்தை இயக்கி இந்தியளவில் புகழடைந்துள்ளார்.
முக்கியமாக, இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால் மிகப்பெரிய புரமோஷன்களோ, நேர்காணல்களோ எதுவும் வழங்காமல் தன் திரைப்படத்தை மட்டுமே நம்பி தைரியமாக வெளியீட்டுக்கு கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது, துரந்தர் 2 திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துரந்தர் ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாலும் ஆதித்யா தர் எந்த ஒரு சேனலுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இதுவரை நேர்காணல்களே அளிக்கவில்லை. மேலும், துரந்தர் ரிவென்ஜ் திரைப்படத்திற்கான புரமோஷன்களும் பெரியளவில் இல்லை. இருந்தும், இந்தப் பாகமும் ஆயிரம் கோடியைக் கடக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
சரியான திரை எழுத்து இல்லாமல் மோசமான திரைப்படங்களை இயக்கி, மணிக்கணக்காக பல நேர்காணல்களைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றும் இயக்குநர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்துள்ளார் ஆதித்யா தர்!