இட ஒதுக்கீடு: மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த ஆண்டி பண்டாரத்தார் சமூகத்தினர் முடிவு
வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆண்டிபண்டாரத்தார் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.
அவிநாசி: வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆண்டிபண்டாரத்தார் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கோவம்ச ஆண்டிபண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் பிரகாசம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சிவராமன் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் ஜோதி(எ)சுந்தரவடிவேல் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு அறிவித்துள்ள எம்பிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர் சமுதாயத்தினருக்கு கடந்த அதிமுக அரசு 10.5 சதவீதம் ஒதுக்கீடு செய்தது. அதை திமுக, அரசுச் சட்டமாக அறிவித்தது. இதனால், ஆண்டிப் பண்டாரம் சமூகத்தினர் பாதிக்கப்படுவர்.
ஏற்கனவே கல்வி, வேலைவாய்ப்பில், ஆண்டிபண்டாரத்தார் சமூகத்தினர் பின்தங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர், மருத்துவர், பொறியாளர் என குறிப்பிட்ட துறையில் யாரும் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் அரசின் இத்தகைய செயலை கண்டித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட 261 அமைப்புகளுடன் இணைந்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம். என்றார்.