சாலை விரிவாக்கம்: தாமரைப்பாக்கத்தில் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தாமரைப்பாக்கத்தில் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சாலை விரிவாக்கப் பணிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தாமரைப்பாக்கத்தில் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காய்கறி, பழம், இளநீர் என சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் போக்குவரத்து வசதிக்காக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் அழிந்து விடும் என்பதால் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி வியாபாரிகள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 40 ஆண்டுகளாக சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும், தற்போது மாற்று இடம் வழங்காமல் கடைகள் அப்புறப்படுத்தப்படுவதால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக வேதனை தெரிவித்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.