கூத்தாநல்லூர்: மனோலயம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கல்
கூத்தாநல்லூர் மனோலயம் அறக்கட்டளை சார்பில், கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் உணவுகள் இன்றி இருப்பவர்களுக்கு இருப்பிடம் தேடிச் சென்று உணவுகள் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் அறக்கட்டளை சார்பில், கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் உணவுகள் இன்றி இருப்பவர்களுக்கு இருப்பிடம் தேடிச் சென்று உணவுகள் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட தமிழர் தெரு, குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கான பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது. தமிழக அரசின் அங்கீகாரத்துடன் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனோலயம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பயிற்சிப் பள்ளியில், 6 வயது முதல் 14 வயது வரையிலானவர்கள் பனங்காட்டாங்குடி தமிழர் தெருவிலும், 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடிதாங்கிச்சேரி பகுதியிலும் என இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.
இப்பள்ளியின் நிறுவனர் ப.முருகையன், அவரது மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான மகேஸ்வரி ஆகிய இருவரும் கவனித்து வருகின்றனர். கடந்த ஆண்டு உருவான கரோனா தொற்று முடிவுக்கு வராமல், மீண்டும் மீண்டும் புதிய வடிவில் உருமாறிய கரோனாவாக படையெடுக்கத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்று மேலும், பரவி விடாமல் இருக்க, தமிழக அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் உணவுகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு, தன்னார்வலர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என பலரும் காலை, மதியம், இரவு உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மனோலயம் ஹெல்த் கேர் அறக்கட்டளை சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டன. கூத்தாநல்லூர், மரக்கடை, லெட்சுமாங்குடி, கோரையாறு, கீழவாழாச்சேரி உள்ளிட்ட இடங்களில் தனிமையில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், ஏழை, எளியவர்கள் என தேடிச் சென்று உணவுகள் வழங்கினர். உணவு வழங்கும் போது, மேலாளர் சுரேஷ், பயிற்சியாளர்கள் வினோத், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.