முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் நிலவும் குளு குளு காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சனிக்கிழமை காலை முதல் நிலவும் குளு குளு காலநிலை மாற்றத்தால் வெயில் கொடுமையை அனுபவித்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பலத்த மழையால் திருப்புவனம் இந்திராநகர் காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சனிக்கிழமை காலை முதல் நிலவும் குளு குளு காலநிலை மாற்றத்தால் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடி பகுதிகளில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இரவு நேரங்களில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டு வந்தனர்.

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

Advertisement

இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 12 செ.மீ  மழை பதிவானது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் சாலைகளில்  மழைநீர் பெருக்கெடுத்தது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நின்றது. திருப்புவனம் நகரில் இந்திராநகர் காலனியில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைத் தண்ணீர் வழிந்தோட வழியின்றி  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

 வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் மழை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

 கோடைகாலம் தொடங்கியது முதல் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியைத் தந்தது.

 கால்நடைகளுக்கும் தோட்டக்கலை பயிர்களுக்கு கோடை விவசாயத்திற்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 மேலும் சனிக்கிழமை காலையில் மழையின் தாக்கம் காரணமாக  மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் காலையில் இருந்து வெயில் முகம் தெரியாமல் வானத்தை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

 இதனால் கோடை காலம் தொடங்கியது முதல் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்கள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் மழை காலம் தொடங்கியுள்ளதால் இனிவரும் நாள்களில் வெயிலின் தாக்கம் குறைந்து மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காலநிலை நிலவும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments