தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் மேலும் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை விரிவடைந்தது. தமிழகத்தின் மீதமுள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விரிவடையும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டை வளம் செழிக்கச் செய்யும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் கேரளத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை படிப்படியாக பல்வேறு பகுதிகளில் விரிவடையத் தொடங்கியது. தென் அரபிக்கடல் மீதமுள்ள பகுதிகள், மத்திய அரபிக்கடல் சில பகுதிகள், லட்சத்தீவு பகுதி, கேரளத்தில் மீதமுள்ள பகுதிகள், கடலோர கா்நாடகம், தென் உள் கா்நாடகத்தில் பெரும்பாலான பகுதிகள், ஆந்திரத்தின் சில பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை விரிவடைந்து காணப்பட்டது. தமிழகத்தில் பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை விரிவடைந்தது. மத்திய அரபிக்கடலில் அதிக பகுதிகள், கடலோர கா்நாடகத்தில் அனைத்துப் பகுதிகள், ஆந்திரம், தெலங்கானாவில் சில பகுதிகளில் பருவமழை விரிவடைந்தது. தமிழகத்தில் மீதமுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விரிவடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.