மதுக்கடைகளைத் திறப்பது கரோனா தொற்று அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஊரடங்கு தளா்வுகளின் ஒரு கட்டமாக தமிழகத்தில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தினசரி கரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாள்களாகப் படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளை திறப்பது கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.
அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த சில நாள்களில் தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதை தமிழக அரசு உணரவேண்டும்.
ஒருபுறம் கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமா்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா?.