முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம்
பகிர்:


சென்னை: தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயனை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஓராண்டு காலம் செயல்படுவார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 17-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் (60). இவர், கடந்த 1999, 2004, 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளராக 4-வது முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஏ.கே.எஸ்.விஜயன், திமுகவில் கோட்டூர் ஒன்றிய துணைச் செயலர், ஒன்றியச் செயலராக இருந்துள்ளார். நாகப்பட்டினம் திமுக மாவட்டச் செயலராக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவர்,  தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலராக உள்ளார். இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏ.கே.எஸ். விஜயனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டார்.

ஏ.கே.எஸ். விஜயனுக்கு மனைவி ஜோதி, மகள் ஓவியா உள்ளனர். ஏ.கே.எஸ்.விஜயனின் தந்தை ஏ.கே.சுப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக இருந்து பின்னர், திமுகவில் இணைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →