புதுச்சேரி: புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள், பத்து நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அத்தகைய கடைகள், நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் கூறியுள்ளார்.