திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசை கண்டித்து, பெட்ரோல், டீசலை பாட்டிலில் அடைத்து அதற்கு மாலையிட்டு, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி மேல ராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.மணி தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற்று விலை உயர்வதை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். கரோனா நிவாரணம் அனைத்து ஆட்டோ தொழிலாளா்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 என மாநில அரசு வழங்கிட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், கடன் தவணையை வசூல் செய்வதற்கு 2021 டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கிட வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆட்டோவிற்கான எப்.சி. இன்சுரன்ஸ் லைசன்ஸ் ரெனிவல் போன்ற வேலைகளுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிட வேண்டும்.
பொதுத்துறை முக்கியத்துவத்தை மறந்து அதனைத் தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகிறது. அதில் குறிப்பாக ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு புதிய வழிமுறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டிப்பதாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில், சங்க நகரச் செயலர் எஸ்.எஸ். சரவணன், மாவட்ட துணைச் செயலர் வி.கலைச்செல்வம், ஏஐடியூசி நகரத் தலைவர் என். தனிக்கோட்டி, ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.பாஸ்கர் கலந்து கொண்டனர்.