சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், அதில் இறுதி முடிவு எடுக்கும் வகையில், மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், உயர்மட்டக் குழுவுடன் ஆலோசித்து மதிமுக முடிவு எடுக்கவுள்ளது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து திமுகவின் நிலைப்பாடு குறித்தும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.