திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் முட்டை மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து, ரூ.3 லட்சத்து 82,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள்களை பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை மற்றும் வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில், செவ்வாய்கிழமை அதிகாலை தனி வட்டாட்சியர் ஆசேக்குமார் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த காய்கறி வியாபாரி காந்திநாதன் என்பவர், பொலிரோ காரில் திருச்சிக்கு வந்துள்ளார். அவரது வாகனத்தை சோதனை செய்த போது, அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் காந்திநாதன், தான் காய்கறிகள் வாங்குவதற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
அதேபோல் துவாக்குடி சுங்கச்சவடி பகுதியில் சர்வேலன்ஸ் குழுவின் சங்கீதா தலைமையில் வாகன தணிக்கையில் தஞ்சைப் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த முட்டை லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது முட்டை வியாபாரி நாமக்கல்லைச் சேர்ந்த சங்கர் என்பவர், முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இரு தொகைகளும் உதவி தேர்தல் அலுவலர் செல்வகணேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர் விசாரணை செய்து வருகிறார்.