சட்டப்பேரவை தேர்தலையொட்டி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உள்பட 405 வாக்குச் சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 405 வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கப் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸார்களுடன் 3 லாரிகளில் வந்தது.
தொடர்ந்து இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன், ஊத்துக்கோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னர் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் 405 வாக்குச் சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 486 பேலட் யூனிட்டுகள், 486 கன்ட்ரோல் யூனிட்டுகள், 507 விவிபிஏடி இயந்திரங்களின் வரிசை எண்கள் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.