போதமலை மலைகிராமத்துக்கு நடந்தே சென்று வாக்குச்சாவடியை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழூர் ஊராட்சி கெடமலை மலைகிராமத்திற்கு 5 கி.மீ. தொலைவு
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழூர் ஊராட்சி கெடமலை மலைகிராமத்திற்கு 5 கி.மீ. தொலைவு ஒற்றையடி பாதையில் நடந்துச் சென்று வாக்குச் சாவடி மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழூர் ஊராட்சிக்கு உட்பட்டது போதமலை கிராமம். பாதை வசதி இல்லாத மலைப்பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை என மூன்று குக் கிராமங்கள் உள்ளன. கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெடமலை கிராமத்திற்கு கரடுமுரடான பாதையில் 5 கி.மீ. நடந்து செல்ல வேண்டும். இதனையடுத்து, ஆயில்பட்டி வழியாக சேலம் மாவட்டம் ஜம்பூத்து மலையடிவாரத்தில் இருந்து சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், தேர்தல் அலுவலர்களுடன், பணியாளர்களுடன் 5 கி.மீட்டர் தூரத்திற்கு மலைப்பாதையில் நடந்து ஏறினார். கெடமலையில் ஆண் வாக்காளர்கள் 167 பேர், பெண் வாக்காளர்கள் 322 பேர் என மொத்தம் 322 வாக்காளர்கள் உள்ளனர்.
கெடமலை அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும், வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் கருவியின் செயல்பாட்டினையும் வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வாக்குச் சாவடி அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.